மாமியாரை கொன்ற மருமகள் கள்ளக்காதலனுடன் கைது


மாமியாரை கொன்ற மருமகள் கள்ளக்காதலனுடன் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 12:38 AM GMT (Updated: 28 Oct 2020 12:38 AM GMT)

மாமியாரை கல்லால் தாக்கி கொன்ற பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை போரிவிலி மேற்கு கோராய் ரோடு பகுதியை சேர்ந்த பெண் ராதா(வயது28). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் சாலுபாய் (57) என்பவருடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு தீபக் மானே என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதனால் ராதாவிற்கும், தீபக் மானேவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சம்பவத்தன்று அவர்கள் உல்லாசமாக இருந்த போது வெளியே சென்றிருந்த மாமியார் சாலுபாய் வீடு திரும்பினார். அப்போது அவர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர். இதனால் அவர்களது கள்ளத்தொடர்பு பற்றி தனது மகனிடம் தெரிவிக்கப்போவதாக சாலுபாய் கூறி உள்ளார்.

மாமியார் கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ராதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொல்ல முடிவு செய்தார். உடனே அங்கு கிடந்த கல்லால் தாக்கி அவரை கொலை செய்துவிட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர். வீட்டில் சாலுபாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராதா மற்றும் கள்ளக்காதலன் தீபக் மானே போரிவிலி மகாத்மாபுலே பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story