டி.வி. நடிகையை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார் போலீசார் தீவிர விசாரணை


டி.வி. நடிகையை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 28 Oct 2020 11:42 PM GMT (Updated: 28 Oct 2020 11:42 PM GMT)

திருமணத்துக்கு மறுத்த டி.வி. நடிகையை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் டி.வி. நடிகை மால்வி மல்கோத்ரா. இவர் ‘சோப் உதான்’ என்ற டி.வி. நிகழ்ச்சியில் நடித்து பிரபலம் ஆனவர். மால்வி கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் அந்தேரி வெர்சோவா பகுதியில் நடந்துசென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சொகுசு காரில் வந்த ஒருவர், நடிகை மால்வியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென அவர் கத்தியை எடுத்து மால்வியை சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடினார்.

இதில் நடிகையின் வயிறு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடிகை மால்வியிடம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட நபரை தனக்கு 1 ஆண்டாக தெரியும் என்றும், திருமணத்துக்கு மறுத்ததால் தன்னை கத்தியால் குத்தி விட்டு தப்பியதாகவும் தெரிவித்தார். அந்த நபரின் பெயர் யோகேஷ் மகிபால் சிங் என்பதையும் தெரிவித்தார்.

இதையடுத்து குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில், அந்த நபர் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வெர்சோவா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் யோகேஷ் மகிபால் சிங் சில காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் அவரை உடனடியாக கைது செய்யவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Next Story