ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 4:41 AM GMT (Updated: 29 Oct 2020 4:41 AM GMT)

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாகை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளசெல்வம், துணை செயலாளர் பேரறிவாளன், வக்கீல் பிரிவை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி செயலாளர் பாண்டியன், நாகை நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், கீழையூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பழனிவேல், பக்ருதீன், கீழ்வேளூர் தொகுதி செயலாளர் உமாநாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.

50 சதவீத இட ஒதுக்கீடு

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது பொய் வழக்கு போட்டதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிக்கல்

இதேபோல் நாகை அருகே சிக்கல் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் துணை செயலாளர் சுரேஷ், நகர செயலாளர்கள் நாகூர் தமிழ்முகம், நாகை முத்துவளவன், கீழ்வேளூர் குணா, மஞ்சை ஹாஜா, யூனுஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமார், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story