கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 70 பேர் கைது


கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 70 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2020 4:58 AM GMT (Updated: 29 Oct 2020 4:58 AM GMT)

நாகையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து நாகை அபிராமி அம்மன் சன்னதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாபுகான் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் அபுஹாசிம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சேக்அலாவுதீன் தொடங்கி வைத்தார். எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் சாதிக், மண்டல செயற்குழு உறுப்பினர் சலீம், பெண்கள் பிரிவு மாவட்ட தலைவர் பஷீராகனி, பொதுச்செயலாளர் சுலைகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை நகரச்செயலாளர் மெய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரதலைவர் பகுருதீன் நன்றி கூறினார்.

70 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 70 பேரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை

இதேபோல் மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி மாவட்ட தலைவர் சபீக்அகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story