திருமண ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர்


திருமண ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர்
x
தினத்தந்தி 30 Oct 2020 2:40 AM GMT (Updated: 30 Oct 2020 2:40 AM GMT)

திருமண ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி பேராசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம், 

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ்(வயது 26) என்பவர் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். மாணவியும், கல்லூரி பேராசிரியர் லோகேசும் முதலில் நட்பாக பழகினர். நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ், தனது வீட்டில் யாரும் இல்லாத போது கல்லூரி மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று உன்னையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு மறுப்பு

ஆனால் அதன்பிறகு லோகேஷ், மாணவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மாணவி செல்போனில் தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பது இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவி, வில்லிவாக்கம் சென்று விசாரித்தபோது, லோகேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு லோகேஷ், “என் பெற்றோர்கள் பார்த்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது” என மறுத்து விட்டதாக தெரிகிறது.

பேராசிரியர் கைது

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியர் லோகேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Next Story