ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி


ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 5 Nov 2020 4:23 AM GMT (Updated: 5 Nov 2020 4:23 AM GMT)

ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், 

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் இந்துபிரியா (வயது 30). இவர் நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் நுழைவு வாயில் முன்பு திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

காதல்

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்துபிரியா அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணியாற்றி உள்ளார். அப்போது அவரின் கடைக்கு வந்து சென்ற கோரிமேட்டை சேர்ந்த கலைச்செல்வன் (30) என்பவரை காதலித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்களிடையே ஏற்பட்ட தகராறால் இருவரும் பேசாமல் இருந்தனர்.

இந்தநிலையில் கலைச்செல்வனுக்கும், ஓமலூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இந்துபிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இதற்கு காதலன் மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்துபிரியா அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கலைச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கலைச்செல்வனுக்கும் ஓமலூரை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இதனால் தன்னை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்துபிரியா கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story