திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு வியாபாரிக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு வியாபாரிக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
x
தினத்தந்தி 8 Nov 2020 6:31 AM GMT (Updated: 8 Nov 2020 6:31 AM GMT)

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கடையில் இருந்து குழந்தைக்கு வாங்கிய சாக்லேட்டில் பீடித்துண்டு இருந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது நண்பருடன் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவருடைய உறவினர் ஒருவர் தனது குழந்தையுடன் அங்கு வந்தார். இதையடுத்து அந்த குழந்தையிடம் பேச்சுக்கொடுத்த கமலக்கண்ணன், என்ன வேண்டும் என்று கேட்டார்.

உடனே அந்த குழந்தையும் தனக்கு பிடித்த சாக்லேட் வேண்டும் என்று கேட்டது. இதையடுத்து பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று 10 ரூபாய் சாக்லேட் ஒன்றை வாங்கினார். பின்னர் அதன் கவரை கிழித்து உள்ளே இருந்த சாக்லேட்டை எடுத்து குழந்தைக்கு கொடுக்க முயன்ற போது, சாக்லேட்டுக்குள் குச்சி போன்ற ஏதோ ஒரு பொருள் இருப்பதை பார்த்தார்.

இதையடுத்து சாக்லேட்டுக்குள் இருந்த அந்த குச்சியை வெளியே எடுத்து அவர் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் சாக்லேட்டில் குச்சி போன்று இருந்தது, பாதி புகைத்த பீடித்துண்டு ஆகும். உடனே அதுகுறித்து கடையில் இருந்த ஊழியரிடம் கமலக்கண்ணன் கேட்டார். அப்போது சாக்லேட்டில் பீடித்துண்டு இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. வேண்டும் என்றால் வேறு சாக்லேட் தருகிறேன் என்றார்.

ஆனால் அதற்கு கமலக்கண்ணன் சம்மதிக்கவில்லை. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சாக்லேட்டில் கிடந்த பீடித்துண்டை பார்வையிட்டனர். பின்னர் அந்த கடையில் இருந்த அனைத்து சாக்லேட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியனிடம் கேட்ட போது, பீடித்துண்டு இருந்த சாக்லேட் உள்பட அந்த கடையில் இருந்த அனைத்து சாக்லேட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளருக்கும் இதுகுறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே கோர்ட்டு மூலம் கடை உரிமையாளர், சாக்லேட் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது சாக்லேட் ஆகும். இதனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகள் கேட்ட உடனே அவற்றை வாங்கி பரிசோதிக்காமல் குழந்தைகளுக்கு கொடுத்து விடுகின்றனர். ஒருவேளை அந்த சாக்லேட்டில் ஏதேனும் விரும்பத்தகாத பொருட்கள் கலந்திருந்தால் அது, குழந்தையின் உடல்நலத்தை பாதித்துவிடும்.

எனவே பெற்றோர் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கும் போது, அவற்றை சோதித்து பார்த்து அதன் பிறகு அவர்களுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். குழந்தைக்கு கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு கிடந்த சம்பவம் திண்டுக்கல் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Next Story