வேளாங்கண்ணியில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வேளாங்கண்ணியில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Nov 2020 11:20 AM GMT (Updated: 8 Nov 2020 11:20 AM GMT)

வேளாங்கண்ணியில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வேளாங்கண்ணி, 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் நிலையம், செபஸ்தியார்நகர், பூக்காரத் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதிகள் ஆகும். ஆர்ச் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாழ்வான இந்த பகுதியில் மழை நீர் சேர்வதாலும், செபஸ்தியார் நகர் குடியிருப்பு பகுதி சாலையின் மட்டத்திலிருந்து தாழ்வான பகுதியாக இருப்பதாலும், மேற்கண்ட பகுதியில் மழைநீர் உட்புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் தினமும் நடைபெறும் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் செபஸ்தியார் நகரில் இருந்து வெள்ளையாற்றில் சென்று கலக்கக்கூடிய வடிகால் பகுதி தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நேற்று வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகில் உள்ள வடிகால் பகுதிக்கு மேல் மூடப்பட்டு கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். மேலும் செபஸ்தியார் நகரில் இருந்து பஸ் நிலையம் வரை செல்லும் வாய்க் காலை தூர் வாரி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், சிறப்பு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகிம்அபுபக்கர், செயல் அலுவலர் குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார்ஆகியோர் உடன் இருந்தனர். சம்பவ இடத்தில் நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு தலைமையில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story