நெல்லை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


நெல்லை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2020 11:47 PM GMT (Updated: 11 Nov 2020 11:47 PM GMT)

நெல்லை டவுன் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லை டவுனில் நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த மார்க்கெட் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஊரடங்கு தளர்வில் மார்க்கெட் மீண்டும் நயினார்குளம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு தினமும் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பிற மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இரவில் ஏலம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த காய்கறிகளை லாரிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள். இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

திடீர் போராட்டம்

இந்த நிலையில் நேற்று இரவு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மார்க்கெட் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மூட்டை ஏற்றுவதற்கு கூலியாக தற்போது 10 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது, இதனை 15 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 70 கிலோவுக்கு அதிகமாக மூட்டைகளை உருவாக்கக்கூடாது. தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரிகளில் காய்கறி மூட்டைகளை ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் மார்க்கெட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story