தூத்துக்குடியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2020 5:37 PM GMT (Updated: 13 Nov 2020 5:37 PM GMT)

தூத்துக்குடியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சத்யபாமா வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் மயில், டி.என்.பி.எஸ்.டி.ஏ. மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் திருத்தம் செய்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிகர், ஜேம்ஸ் விக்டர், சதீஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story