‘தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை’ தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி


‘தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை’ தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி
x
தினத்தந்தி 16 Nov 2020 2:03 AM GMT (Updated: 16 Nov 2020 2:03 AM GMT)

‘தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை’ என்றும், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளை அரசு முதன்மை செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு பணி மேற்கொண்டார்.

பின்னர் அவர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள், குழந்தைபெற்ற தாய்மார்கள் உள்ளிட்ட நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து அவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்றுவரும் பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி ரெயில் நிலையம் எதிரே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி அரசு பொது மருத்துவமனை, திருத்தணி முருகன் கோவில் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு ஆரம்ப சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை.மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நோய்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. திருவள்ளூரில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை மற்றும் ரூ.220 கோடி மதிப்பீட்டில் கல்லூரி தங்கும் விடுதிகள் என ரூ.385 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும் என கூறினார்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவர்த்சவ், குடும்ப நலம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் ராணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story