கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 79 ஆயிரத்து 82 வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு


கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 79 ஆயிரத்து 82 வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 16 Nov 2020 8:19 PM GMT (Updated: 16 Nov 2020 8:19 PM GMT)

கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரை வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 79 ஆயிரத்து 82 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூர், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4,25,560 ஆண் வாக்காளர்களும், 4,53,454 பெண் வாக்காளர்களும், 68 இதர வாக்காளர்களும் என கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,79,082 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1,032 வாக்குச்சாவடி மையங்களும், 610 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குளித்தலை சார்ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் இன்று (நேற்று) முதல் அடுத்தமாதம் 15-ந்தேதி வரை வைக்கப்படும்.

சிறப்பு முகாம்கள்

மேலும் ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

இன்று (நேற்று) முதல் வருகிற 15-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்.

வருகிற 21, 22-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் 12, 13-ந்தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல்(படிவம் 6), நீக்கம்செய்தல் (படிவம் 7), திருத்தம் செய்தல் (படிவம் 8) மற்றும் சட்டமன்றதொகுதிக்குள் இடமாற்றம் (படிவம் 8ஏ) உள்ளிட்டவை குறித்த மனுக்களை அளிக்கலாம்.

பெயர் நீக்கம்

தற்போது வரை கரூர் மாவட்டத்தில் 11,342 பேர் இறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எத்தனை பேர், 18 வயதிற்குட்பட்டவர்கள் எத்தனைபேர், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் எத்தனைபேர் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந்தேதி வெளியிடப்படும். வாக்காளர்கள் http://www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும், voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பிரபு உள்பட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story