திருப்போரூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு


திருப்போரூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 11:47 PM GMT (Updated: 16 Nov 2020 11:47 PM GMT)

திருப்போரூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிரொலியாக சூரசம்ஹார விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

முருகப்பெருமானின் திருத்தலங்களில் புகழ்பெற்ற கோவிலாக திருப்போரூர் கந்தசுவாமி கோவிலும் உள்ளது. முருகப்பெருமான் அசுரர்களுடன் கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர் என்றும், விண்ணில் போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம் என்றும், மண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர் எனவும் புராணங் களில் கூறப்படுகிறது.

இதையொட்டி, இந்த கோவில்களில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தொடங்கும் கந்தசஷ்டி பெருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இந்தாண்டு கந்தசஷ்டி விழா, நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சூரசம்ஹார விழா ரத்து

ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளதால், தினமும் சூர பொம்மைகளுடன் வீதி உலா மற்றும் 6-ம் நாள் சூரசம்ஹார விழா நடத்த முடியாத நிலை உள்ளது.

இதன்காரணமாக, இந்தாண்டு, சூரசம்ஹார விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 6 நாட்களும் கோவிலில் நடக்கும் லட்சார்ச்சனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சஷ்டி விழாவின் இறுதி நாளான 20-ந்தேதி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அப்போது, கோவில் கொடியேற்றம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அவை கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு பக்தர் கள் அனுமதியின்றி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story