பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் குளித்து கும்மாளமிட்ட காட்டு யானைகள்


பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் குளித்து கும்மாளமிட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 17 Nov 2020 5:15 AM GMT (Updated: 17 Nov 2020 5:06 AM GMT)

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு குளித்து கும்மாளமிட்டன.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக அணைக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 5 யானைகள் வெளியேறி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்தன.

பின்னர் அந்த யானைகள் அணையில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் இறங்கின. இதைத்தொடர்ந்து தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி குடித்ததுடன் யானைகள் ஒன்றன் மீது ஒன்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடின. அதுமட்டுமின்றி தண்ணீரில் யானைகள் குளித்து கும்மாளமிட்டன.

அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலைக்கு வந்த யானைகள், அதை கடந்து காராச்சிக்கொரை வனப்பகுதிக்குள் சென்றன.

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story