கயத்தாறு அருகே மழைக்கு தொழிலாளி வீடு இடிந்தது பருத்திக் காட்டில் தேங்கிய தண்ணீர்


கயத்தாறு அருகே மழைக்கு தொழிலாளி வீடு இடிந்தது பருத்திக் காட்டில் தேங்கிய தண்ணீர்
x
தினத்தந்தி 17 Nov 2020 5:55 PM GMT (Updated: 17 Nov 2020 5:55 PM GMT)

கயத்தாறு அருகே பெய்த கனமழைக்கு தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது. அனைவரும் காட்டு வேலைக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினர். மேலும் பருத்திக்காட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகி சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கயத்தாறு, 

கயத்தாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதில் கயத்தாறில் நெல்லை-மதுரை மெயின் ரோடு மற்றும் தெருக்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களிலும் மழை கொட்டியது. கயத்தாறு அருகே தெற்குமயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழிலாளியான சுப்பிரமணியன்(வயது 39) வீடு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது குடும்பத்தோடு அவர் காட்டு வேலைக்குச் சென்று இருந்ததால், அனைவரும் உயிர் தப்பினர்.

பருத்திக்காட்டில் தண்ணீர் தேங்கியது

பக்கத்து கிராமமான ராஜபுதுகுடி கிராமத்தில் வயக்காட்டில் 85 ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். பருத்திக்காட்டில் இரண்டடி உயரத்திற்கு தண்ணீர் பெருகி நிற்கிறது. அந்தத் தண்ணீருக்கு வடிகால் இல்லாத நிலையில் பருத்திச் செடி அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story