சட்டமன்ற தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை விட வெற்றி பெறுவது தான் முக்கியம் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


சட்டமன்ற தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை விட வெற்றி பெறுவது தான் முக்கியம் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2020 2:00 PM GMT (Updated: 19 Nov 2020 1:53 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் தொகுதி எண்ணிக்கை விட வெற்றி பெறுவது தான் முக்கியம் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து சந்திக்க உள்ளோம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேசும்போது காங்கிரஸ் கட்சிக்கு எங்கு தகுதியான வேட்பாளர்கள் என்று அறிந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தை இருக்கும். தொகுதி எண்ணிக்கை மனதில் வைத்து கொண்டு கூட்டணி பேச மாட்டோம். தி.மு.க. ஐ பேக் மூலம் சர்வே எடுத்த மாதிரி அகில இந்திய காங்கிரசும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்துள்ளது. எங்களுக்கு எங்கு பலம் இருக்கிறது, கூட்டணி கட்சிக்கு எங்கு பலம் இருக்கிறது அதை வைத்து தான் தொகுதியை கேட்போம்.

தொகுதி எண்ணிக்கையை மனதில் வைத்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு போக முடியாது.

தொகுதி எண்ணிக்கையை விட தேர்தலில் வெற்றி பெறுவது தான் முக்கியம். தி.மு.க. கூட்டணியில் புதிதாக கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தொகுதி பங்கீடு பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. நாங்களும் சர்வே முடிவுபடி தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மானாமதுரை சட்டமன்ற பொது செயலாளர் சஞ்சய் காந்தி, வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ், காங்கிரஸ் வக்கீல் பிரிவு மாநில பொது செயலாளர் கே.எஸ்.ராஜபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story