பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை தீவிரம் - சில்லரை வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக வாங்கி சென்றனர்


பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை தீவிரம் - சில்லரை வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 20 Nov 2020 12:15 PM GMT (Updated: 20 Nov 2020 12:00 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை தீவிரமாக நடக்கிறது. சில்லரை வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக பெரிய வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக விலைக்கு விற்பதற்காக ஆலத்தூர் தாலுகா இரூர், கூத்தனூர் பிரிவு சாலை, சத்திரமனை ஆகிய பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் 4 பண்ணைகளில் இருந்து மொத்தம் 483 டன் பெரிய வெங்காயத்தை திருச்சி உட்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்து கூட்டுறவுத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்காயம் பதுக்கி வைக்க உடந்தையாக இருந்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயத்தில் பயன்பாட்டுக்கு உகந்தவைகளாக பிரித்தெடுத்து கூட்டுறவு அங்காடி மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அழுகல் உள்ளிட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்ட பெரிய வெங்காயம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மூட்டை மூட்டையாக அனுப்பப்பட்டது. ரேஷன் கடைகளில் அதிக மூட்டைகளில் பெரிய வெங்காயம் குவிந்ததால், ரேஷன் கார்டுதாரர்களிடமும், பொதுமக்களிடமும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூவி, கூவி பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ததை காண முடிந்தது.

இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வந்த செயற்கை வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாக உணவு விடுதிகள், டிபன் கடைகளில் ஆம்லேட்டில் வெங்காயம் சேர்க்கப்படாமலும், சமோசா, ஆனியன் ரயிதா, வெங்காய பஜ்ஜி, போண்டா போன்றவற்றில் பெரிய வெங்காயத்தை பயன்படுத்தாமலும், குறிப்பிட்ட ருசியை கொடுக்க முடியாமல் சமையல் கலைஞர்கள் தடுமாறுகின்றனர். வெங்காய ரயிதாவிற்கு பதிலாக வெள்ளரிக்காய் ரயிதா வழங்கி வருகின்றனர். சமோசாவில் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் அதிகம் சேர்க்கப்படுவதால், திண்பண்டங்களை தயாரிக்கும் மாஸ்டர்களுக்கு அதில் ருசியை தருவதில், பெரிய சவாலாகவே உள்ளது. ஆனால் வீடுகளில் பெரியவெங்காயத்தை குறைந்த அளவில் பயன்படுத்தி வந்தாலும், விலை அதிகமாக விற்பதால், பெரிய வெங்காயம் வாங்குவது கடந்த ஓரிரு மாதமாக வெகுவாக குறைந்துவிட்டது. உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.68-க்கும், காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ரூ.45-க்கு பெரிய வெங்காய விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கான பெரிய வெங்காயத்தை, அனுமதி இல்லாதபோதும் காய்கறி கடைகள், மார்க்கெட், உழவர் சந்தை பகுதிகளில் விற்பனை செய்வதற்காக சில்லரை வியாபாரிகள் ரேஷன் கடைகளில் மூட்டை மூட்டையாக வாங்கி தங்களது மொபட்டுகளில் கொண்டு சென்றதை காண முடிந்தது.

Next Story