வில்லியனூர் அருகே போலீசார் அதிரடி: துப்பாக்கி முனையில் 10 பேர் கும்பல் கைது


வில்லியனூர் அருகே போலீசார் அதிரடி: துப்பாக்கி முனையில் 10 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 20 Nov 2020 11:26 PM GMT (Updated: 20 Nov 2020 11:26 PM GMT)

வில்லியனூர் அருகே காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் கொட்டகையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 10 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

வில்லியனூர், 

வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் உளவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து மேற்கொண்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அகரம் கிராமத்தில் உள்ள விவசாய மோட்டார் கொட்டகையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமார், போலீசாருடன் அங்கு சென்று பார்த்தபோது மதுபோதையில் வாலிபர்கள் இருந்தனர்.

துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு

போலீசாரை கண்டதும் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அவர் கள் தாக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் குமார் தனது துப்பாக்கியை எடுத்து அந்த கும்பலை நோக்கி நீட்டினார். ஆயுதங்களை கீழே போடாவிட்டால் சுட்டுவிடுவதாக எச்சரித்தார்.

ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் குமார் தெரிவித்து இருந்த தகவலின் பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேலு மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்து அந்த கும்பலை சுற்றிவளைத்தனர். பிடிபட்ட 10 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

காங்கிரஸ் பிரமுகரை கொல்ல சதி

விசாரணையில் அவர்கள் கூடப்பாக்கம் உளவாய்க்கால் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 20), சென்னை பாடி கலைவாணன் நகர் பாபு (19), கண்டமங்கலம் அருகே பாக்கம் அரவிந்த் (20), விஸ்வா (20), மணிபாலன் (21), அகரம் கவுதம் (19), கடலூர் மாவட்டம் உச்சிமேடு மதன் (28), மஞ்சக்குப்பம் வெங்கட் (23), வில்வநகர் சரத்குமார் (25), திருவந்திபுரம் சூர்யா (23) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமானது.

வில்லியனூர் அகரம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கணபதி (50). மணல் வியாபாரியான இவரை கடந்த மாதம் ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது. அப்போது அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். 2-வது தடவையாக கணபதியை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த கும்பல் பதுங்கி இருந்ததும், இதற்கான செலவுக்கு அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் புகுந்து நள்ளிரவில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பாராட்டு

கைதான 10 பேரும் கொரோனா பரிசோதனைக்குப் பின் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேலு ஆகியோர் பாராட்டினர்.

Next Story