குன்றத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு


குன்றத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2020 10:00 PM GMT (Updated: 21 Nov 2020 7:58 PM GMT)

குன்றத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் புது வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சிபாஸ் (வயது 15). குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி அனஷ் காஜா (13). கோவூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை சிபாஸ், அனஷ் காஜா இருவரும் தங்கள் நண்பரான முஷாரப் (15) என்பவருடன் ஒரே மொபெட்டில் போரூர் நோக்கி சென்றனர். மொபெட்டை சிபாஸ் ஓட்டிச்சென்றார். கோவூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை சிபாஸ் முந்தி செல்ல முயன்றார். இதில் மொபெட்டில் இருந்து நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி அனஷ் காஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன அனஷ் காஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் 3 பேரும் தொழுகைக்கு சென்றதாகவும், விளையாட சென்றதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story