செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை - ஒருவர் கோர்ட்டில் சரண்


செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை - ஒருவர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 21 Nov 2020 10:00 PM GMT (Updated: 21 Nov 2020 7:59 PM GMT)

செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் விமல் என்ற குள்ள விமல் (வயது 38). ரவுடியான இவர் மீது செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த விமலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதை பார்த்து கூச்சலிட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக பட்ரவாக்கம் சிவா (40) செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விமல், பட்ரவாக்கம் சிவாவை தரக்குறைவாக பேசியதால் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசார் கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story