வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடம் படிவங்களை பெற்று வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் - ஆய்வுக்கூட்டத்தில் பார்வையாளர் அறிவுறுத்தல்


வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடம் படிவங்களை பெற்று வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் - ஆய்வுக்கூட்டத்தில் பார்வையாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Nov 2020 4:51 AM GMT (Updated: 22 Nov 2020 4:51 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடம் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் போன்ற படிவங்களை பெற்று வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போகனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், பால் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தி இயக்குனருமான வள்ளலார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்( பொது) ரகுகுமார், உதவி கலெக்டர்கள் குணசேகரன், கற்பகவள்ளி, துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம், மற்றும் தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பேசியதாவது:-

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான படிவங்கள் உள்ளதா? என அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 1.1.2003 தேதிக்கு முன்னர் பிறந்தவர்களை வாக்காளர்களாக பதிவு செய்யவேண்டும். ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அளித்து படிவம்-6 பூர்த்தி செய்து பெயரை சேர்த்து கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடம் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் போன்ற படிவங்களை பெற்று வீடு,வீடாக சென்று ஆய்வு செய்து பணியை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். 1.1.2021-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மைய அலுவலரால் அரசு வேலை நாட்களில் பெறப்படும்.

மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை), 12.12.2020 (சனிக்கிழமை), மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story