வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க 1,168 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் - திருவாரூர் கலெக்டர் சாந்தா தகவல்


வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க 1,168 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் - திருவாரூர் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2020 5:47 AM GMT (Updated: 22 Nov 2020 5:47 AM GMT)

வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க திருவாரூர் மாவட்டத்தில் 1,168 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக கலெக்டர் சாந்தா கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது.

2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம், நீக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு முகாம் இன்று (நேற்று) மற்றும் நாளை (இன்று) நடைபெறுகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என அலுவலர்கள் உரிய முறையில் சரிபார்த்து வாங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் பாலச்சந்திரன், தாசில்தார் நக்கீரன், திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கூத்தாநல்லூர் அருகே வெங்காரம் பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவாரூர் சட்டசபை தொகுதியில் 303 வாக்குச்சாவடி மையங்களிலும், திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியில் 274 வாக்குச்சாவடி மையங்களிலும், நன்னிலம் சட்டசபை தொகுதியில் 309 வாக்குச்சாவடி மையங்களிலும், மன்னார்குடி சட்டசபை தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 1,168 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது’ என்றார். ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, கூத்தாநல்லூர் தாசில்தார் ஜீவானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நீடாமங்கலம் வட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர்கள் முகவரியில் பெயர் திருத்தம் மேற்கொள்ளுதல், புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது.

நீடாமங்கலத்தில் நடந்த முகாமை தாசில்தார் மதியழகன், பரப்பனாமேடு ஊராட்சியில் நடந்த முகாமை ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர். இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

திருமக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பான பணிகளை தலையாமங்கலம் வருவாய் ஆய்வாளர் வளர்மதி, இளநிலை வருவாய் ஆய்வாளர் திவ்யா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Next Story