வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2020 4:26 PM GMT (Updated: 22 Nov 2020 4:26 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.

திருப்பூர்,

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி, திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்த சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் 2 ஆயிரத்து 493 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,043 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு முகாமை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருமுருகன் பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் என்றும், பெறப்படும் படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளின் படி கள விசாரணை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடிவு செய்யவேண்டும் என்றும் அங்குள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இன்று நடக்கிறது

இன்று (ஞாயிற்றுக்கிழமை) , அடுத்த மாதம் 12-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பொதுமக்களே கேட்டுக் கொண்டார்.இந்த ஆய்வின்போது சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் வாசுகி, தாசில்தார்கள் ஜெகநாதன் (அவினாசி), பாபு (திருப்பூர் வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story