கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் காயம்


கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Nov 2020 11:03 PM GMT (Updated: 23 Nov 2020 11:03 PM GMT)

கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

பூந்தமல்லி,

திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அசோக் குமார் (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் நுழைந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே சென்ற ஒருவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி மறுபக்கம் பாய்ந்து, எதிரே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பஸ்களின் முன் பக்க கண்ணாடிகள் நொறுங்கியதுடன், முன்பகுதிகள் சேதம் அடைந்தது.

2 பேர் காயம்

பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் மற்றும் சாலையை கடந்தவர் உள்ளிட்ட இருவருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சேதமடைந்த அரசு பஸ்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். 

Next Story