திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த குறை தீர்வு கூட்டத்தில் 44 மனுக்கள் மீது உடனடி தீர்வு - கலெக்டர் சிவன்அருள் நடவடிக்கை


திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த குறை தீர்வு கூட்டத்தில் 44 மனுக்கள் மீது உடனடி தீர்வு - கலெக்டர் சிவன்அருள் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 10:15 PM GMT (Updated: 24 Nov 2020 4:21 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 44 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 271 மனுக்கள், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் 50 மனுக்கள், வாணியம்பாடியில் 36 மனுக்கள், ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் 48 மனுக்கள், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 43 மனுக்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 448 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 44 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளி உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, சிறு, குறு விவசாயி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணி, உதவி கலெக்டர் (பொறுப்பு) அப்துல்முனீர், துணை கலெக்டர்கள் பூங்கொடி, லட்சுமி, சதீஷ்குமார், அதியமான்கவியரசு, சரஸ்வதி, சுமதி, பத்மநாதன், சிவப்பிரகாஷம், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story