சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டுமாமனாரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை


சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டுமாமனாரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2020 12:50 PM GMT (Updated: 26 Nov 2020 12:50 PM GMT)

சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டுமாமனாரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார்.

திருப்பூர், 

திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த சவிதா (வயது 34) என்பவர் தனது இரு மகள்களுடன் வந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் ரவி உடல்நிலை சரியில்லாமல் இறந்து 4 மாதங்கள் ஆகிறது. நான் இரண்டு பெண் குழந்தைகளுடன் எனது மாமனார் சாமியப்பன் மற்றும் மாமியார் பாலாமணி ஆகியோருடன் வசித்து வந்தேன். எனது மாமனார் உடல்நிலை சரியில்லாததால் நானும் எனது மாமியாரும் அவரை கவனித்துக் கொண்டு இருக்கிறோம். அவருக்கு சொந்தமான 50 சென்ட் இடம் கணபதி பாளையத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தை எனது மாமியாரின் உறவினரான சவுந்தர்ராஜன் என்பவர் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி எனது மாமனார் பெயரில் உள்ள இடத்தை அவரது பெயருக்கு மாற்றி எழுதி கொண்டார். இது சம்பந்தமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தபோது அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது எனது மாமியார் பாலாமணியை எனக்கு எதிரியாக்கி எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கி எனது மாமனார் பெயரில் கணக்கம்பாளையத்தில் உள்ள 5.92 ஏக்கர் நிலத்தை எனது மாமியார் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டனர். எனக்கும், என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக சவுந்தரராஜன் கடந்த 19-ந் தேதி ரங்கசாமி உடன் என் வீட்டிற்கு வந்து என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது எனது மாமனாரை சவுந்தரராஜன், ரங்கசாமி, விஸ்வநாதன் ஆகியோர் கடத்திச் சென்று எங்கோ வைத்துக்கொண்டு வழக்கிலிருந்து வாபஸ் வாங்க கோரி என்னை மிரட்டி வருகிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 

Next Story