எரிசாராய தொழிற்சாலை முன்பு டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா


எரிசாராய தொழிற்சாலை முன்பு டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 26 Nov 2020 1:50 PM GMT (Updated: 26 Nov 2020 1:50 PM GMT)

கவுந்தப்பாடி அருகே எரிசாராய தொழிற்சாலை முன்பு டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா.

கவுந்தப்பாடி, 

கவுந்தப்பாடி அருகே சின்னப்புலியூரில் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிவா டிஸ்டல்லரிஸ் என்ற எரிசாராயம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் முன்பு வாகன டிரைவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று, டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டிரைவர்கள் கூறும்போது, ‘இந்த நிறுவனத்துக்காக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மொலாசஸ் எனப்படும் கரும்பு சாற்றின் கழிவுகளை டேங்கர் லாரியில் கொண்டு வந்து, இங்கு தயாரிக்கப்படும் எரிசாராயத்தை கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நாங்களே வாகனங்களில் கொண்டு சென்று சேர்க்கிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை நிறுவனத்தின் சார்பில் அடிப்படை ஊதியம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. பணிக்கு வந்த நாட்களுக்கு மட்டுமே தினப்படி வழங்கி உள்ளனர். தற்போது கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் மொத்தம் 36 குடும்பத்தினர் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் 36 கனரக வாகன டிரைவர்களும் குடும்பத்துடன் நிறுவனம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர். அதற்கு போலீசார் கூறும்போது, ‘வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பவானி தாலுகா அலுவலகத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்றனர். இதை ஏற்றுக்கொண்ட டிரைவர்கள் தர்ணா போராட்டதை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story