நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டி வருகின்றனர் - அமைச்சர் காமராஜ் பேட்டி


நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டி வருகின்றனர் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 27 Nov 2020 10:15 PM GMT (Updated: 28 Nov 2020 2:56 AM GMT)

நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டி வருகின்றனர் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 108 ஆமபுலன்ஸ் வாகனத்திற்கான சாவியை வழங்கி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களுக்கு பேரிடர் உள்ளிட்ட எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் அனைவராலும் பாராட்டப்படுகின்ற நடவடிக்கையாக அமைகிறது.

தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்தார். கஜா புயல் தமிழகத்திலுள்ள 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த பாதிப்புகளை முதல்-அமைச்சர் நேரடியாக வந்து பார்வையிட்டு தேவையான நிவாரணம் வழங்கினார். அதற்கு பின்னால் எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

25 ஆண்டுகள் உழைப்பு ஒரே நாளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த மக்களுக்கு உரிய நடவடிக்கை மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை முதல்-அமைச்சர் மீட்டு தந்தார். இதனையடுத்து உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து குழுக்கள் மூலம் ஆலோசனை பெற்று எடுத்த நடவடிக்கையால் மற்ற மாநிலங்களை விட தமிழகம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் உள்ளது. இதனை பிரதமர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

நிவர் புயலால் காற்று, மழையால் பாதிப்பு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு இன்றி தப்பியது. நிவர் புயலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். முதல்-அமைச்சருக்கு திருவாரூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் மக்களின் அவசர கால மருத்துவ உதவிக்காக 17 வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 2 புதிதாக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதா, மருத்துவகல்லூரி முதல்வர் முத்துக்குமரன், 108 ஆம்புலன்ஸ் கோட்ட மேலாளர் மோகன், மாவட்ட மேலாளர் செந்தில்வேலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிவர் புயல் காரணமாக வலங்கைமான் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் காமராஜ், மழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிப்பவர்களுக்கு நடமாடும் உணவு வழங்கும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், துணைத்தலைவர் வாசுதேவன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர்(பொறுப்பு) இளவரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர்கள் குணசேகரன், ஜெயா இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், ஒன்றிய ஆணையர்கள் கமலராஜன், சிவகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story