கார்த்திகை தீபதிருநாளையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கார்த்திகை தீபதிருநாளையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 30 Nov 2020 1:48 AM GMT (Updated: 30 Nov 2020 1:48 AM GMT)

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை தீபதிருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருநாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை தீபதிருநாளையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலை சாமிக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.இதை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானைக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி பிரகார புறப்பாடு நடந்தது.

சொக்கபனை

நந்தியம்பெருமாள் சன்னதி முன்பு பெண்கள் தீபமேற்றி தரிசனம் செய்தனர். நேற்று மாலை கோவில் முன்பு சொக்கபனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல பொரவாச்சேரியில் தண்டாயுதபாணி கோவில், நாகை குமரன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

எட்டுக்குடி

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபதிருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பூஜை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சிறப்பு அபிஷேகத்தின் போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அபிஷேகம் முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Next Story