மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தும் நிலைய கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தும் நிலைய கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 30 Nov 2020 3:10 AM GMT (Updated: 30 Nov 2020 3:10 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தும் நிலையங்களுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான, முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் உள்ள நீராவி வெப்ப செயலாக்க ஆலை, தனிப்பட்ட விரைவான உரைபனி மற்றும் காமா கதிர்வீச்சு கொண்டு பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதேபோல், ஓசூர் தாலுகா மோரனப்பள்ளி கிராமத்தில் 7.67 ஏக்கர் பரப்பளவில் ரூ. 20.20 கோடி மதிப்பில் அமைய உள்ள சர்வதேச மலர் ஏல மைய கட்டிட பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அப்போது, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதன்மை பதப்படுத்தும் மையங்களை குழுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மானியம்

இதேபோல் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் மா பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, ஈடுபட உள்ள சிறு மா பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான மானியம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள மா மற்றும் அதனைச் சார்ந்த உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவும், வங்கி கடனுடன் கூடிய திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை மூலதனம் மானியம் வழங்கப்படும். பயனாளிகளின் பங்களிப்புத்தொகை திட்ட மதிப்பீட்டில் குறைந்த பட்சம் 10 சதவீதம், மீதமுள்ள தொகை வங்கியில் இருந்து கடனாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

Next Story