குறைந்த விலையை அரசு நிர்ணயித்தபோதும் தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது: மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை


குறைந்த விலையை அரசு நிர்ணயித்தபோதும் தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது: மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
x
தினத்தந்தி 30 Nov 2020 8:30 PM GMT (Updated: 30 Nov 2020 8:30 PM GMT)

குறைந்த விலையை அரசு நிர்ணயித்து இருந்தபோதிலும், தங்கத்திற்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மணல் கடத்தலை கட்டுப்படுத்த வழக்கு
மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.

பொதுப்பணித்துறை மூலமாக நடத்தப்படும் அரசின் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதி செய்து உள்ளது. ஆனால் இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவு செய்து மணலை அதிக விலைக்கு விற்கிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்ய முடிவதில்லை. இடைத்தரகர்கள் மூலம் புக்கிங் செய்து விற்கப்படும் மணலின் விலை அதிகமாக உள்ளது.

எனவே, ஆன் லைன் வழியாக புக்கிங் செய்து அதன் மூலம் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “2 இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. தற்போது இந்த வசதி நடைமுறையில் தான் உள்ளது” என்றார்.

தங்கத்துக்கு நிகராக மணல் விலை
அப்போது நீதிபதிகள், “அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியும். ஆனால் அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “தற்போது மணலின் விலை ரூ.45 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் தங்கத்துக்கு நிகராக தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள விலையில் மணல் கிடைப்பதில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் சாதாரண பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story