ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிய காட்சி.
x
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிய காட்சி.
தினத்தந்தி 30 Nov 2020 8:38 PM GMT (Updated: 30 Nov 2020 8:38 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தொடர் மழை எதிரொலியாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட குடிநீர் தேவைக் கும், விவசாய தேவைக்கும் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் வருகிற 17-ந்தேதி வரையில் 3 கட்டங்களாக 1,792 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

3 ஆயிரம் கனஅடி
அதன்படி முதற்கட்டமாக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அந்த தண்ணீர், வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறியது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் முன்பகுதியில் உள்ள இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. வைகை ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story