கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 5:15 AM GMT (Updated: 1 Dec 2020 5:15 AM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் தனராஜ் தலைமையில் லாரி உரிமையாளர்கள் நேற்று கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சேலம் மண்டல துணை போக்குவரத்து ஆணையர் சுரேசை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சரக்கு வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க முடியாதநிலை உள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் லாரி உரிமையாளர்கள் காலாண்டு வரி, வாகன காப்பீடு ஆகியவற்றை தொடர்ந்து நிலுவையின்றி செலுத்தி வருகிறோம்.

வரி விலக்கு

கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காலாண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோடு, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவது, வேக கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ். கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து தான் வாங்கி பொருத்த வேண்டும் என்ற நடைமுறை இல்லை.

சாலை வரிவிலக்கு அளிக்காமல் அபராதம் இன்றி செலுத்த வேண்டுமென தமிழகத்தில் மட்டும் தினமும் புதிது புதிதாக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. விண்ணை முட்டும் அளவிற்கு டீசல் விலை, சுங்க கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்வு ஆகியவைக்கு மத்தியில் சரக்கு லாரி வாடகை மட்டும் ஏனோ உயரவில்லை. ஆனால் ஓரிரு வாகனங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அன்றாடம் பிழைப்பு நடத்தும் சிறு லாரி உரிமையாளர்கள் இத்தொழிலை விட்டு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேக கட்டுப்பாட்டு கருவி

எனவே மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி உரிய தயாரிப்பு நிறுவனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தலாம் என்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 நிறுவனங்கள் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட 2 நிறுவனங்களில் மட்டும் ஒளிரும் ஸ்டிக்கர் வாங்க அனுமதி அளித்தமைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஜி.பி.எஸ். கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்கிப் பொருத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலவரையற்ற போராட்டம்

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில், மனுவில் அளித்துள்ள கோரிக்கைகளை 4 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவது என முடிவு செய்து உள்ளோம், என்றார்.

Next Story