குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Dec 2020 6:19 AM GMT (Updated: 1 Dec 2020 6:19 AM GMT)

பழனி-திண்டுக்கல் சாலையில் திருநகர் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.

பழனி,

பழனி-திண்டுக்கல் சாலையில் திருநகர் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் ஆயக்குடி குமாரநாயக்கன்குளம், தட்டான்குளம், கலிக்கநாயக்கன்பட்டி குளம், தேவநாயக்கன்குளம், குறும்பபட்டி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்ப வேண்டும் என்றால் வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். அப்போதுதான் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் விவசாயிகள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், வரதமாநதி அணைக்கு தற்போது நீர்வரத்து குறைவாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் ஆயக்குடி பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story