வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரியில் 8 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரியில் 8 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2020 5:50 AM GMT (Updated: 3 Dec 2020 5:50 AM GMT)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 8 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்க நிர்வாகி விணு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜி, ராமச்சந்திரன், மாணிக்கவாசகம், ராஜநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் பிள்ளை தொடக்க உரையாற்றினார். ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஆல்பர்ட், தொ.மு.ச. மாவட்ட துணைச்செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜு, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் அந்தோணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். குருந்தங்கோடு வட்டார செயலாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் நிறைவுரையாற்றினார்.

8 இடங்கள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அந்தந்த தொழிற்சங்கங்களின் கொடிகளை கைகளில் பிடித்திருந்தார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் காஞ்சாம்புறத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ் தலைமையிலும், குலசேகரத்தில் மாவட்ட பொருளாளர் சதீஷ் தலைமையிலும், அடைக்காகுழியில் வட்டார செயலாளர் சுனில்குமார் தலைமையிலும், தக்கலையில் மாவட்ட தலைவர் சைமன்சைலஸ் தலைமையிலும், ஆற்றூரில் வட்டார செயலாளர் பெனட் தலைமையிலும், களியலில் வட்டார செயலாளர் சசிகுமார் தலைமையிலும், குழித்துறையில் வட்டார செயலாளர் மோகன்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் மாவட்ட செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள், ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

Next Story