கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கிரண்குராலா தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கிரண்குராலா தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2020 12:45 PM GMT (Updated: 3 Dec 2020 12:37 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம், இவற்றில் எதுகுறைவான தொகையே அந்த தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும். 125 சி.சி.க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்தநிதியில் இருந்தோ, வங்கிகடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாகனம் வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயனாளிகள் 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர், பழகுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மானியத்தொகை போக இருசக்கரவாகனத்தின் மீதித் தொகை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

தகுதி வாய்ந்த பயனாளிகள் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறுதொழில் செய்யும் பெண்கள், சுய நிதி உதவிபெறும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் அரசுத் திட்டங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு, கிராமவறுமை ஒழிப்புச் சங்கங்கள், மகளிர் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா (ASHA) பணியாளர்கள் ஆகியோர் தகுதியானவர்கள். இந்த திட்டத்துக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் கொடுக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story