மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை தபால் நிலையத்தை 3-வது நாளாக முற்றுகை; 40 பேர் கைது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை தபால் நிலையத்தை 3-வது நாளாக முற்றுகை; 40 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2020 3:03 AM GMT (Updated: 4 Dec 2020 3:03 AM GMT)

தஞ்சையில் 3-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய கலால் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வடமாநிலங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒருவாரம் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி தஞ்சை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் ஜீவக்குமார், செந்தில்குமார், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

40 பேர் கைது

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் அருளரசன், கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர் சங்கத்தினர்

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தார்.

முற்றுகையிட்ட மாணவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். தள்ளுமுள்ளு நடைபெற்றதில் மாணவர் சங்கத்தை சேர்ந்த 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Next Story