அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைய பணியாற்ற வேண்டும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு


அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைய பணியாற்ற வேண்டும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
x
தினத்தந்தி 4 Dec 2020 6:10 AM GMT (Updated: 4 Dec 2020 6:10 AM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைய பணியாற்ற வேண்டும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 21, 33-வது வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் மண்ணரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குணசேகரன் எம்.எல்.ஏ., மாநில அமைப்புச் செயலாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியதாவது:-

அ.தி.மு.க. உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனக்கு பிறகும் கட்சியும், ஆட்சியும் தமிழக மக்களுக்கு நூறாண்டுகள் சேவை செய்யும் என்று தொண்டர்களாகிய உங்களை நினைத்து தான் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. அந்த நல்லாட்சி மீண்டும் தொடர நாம் உழைக்க வேண்டும். எளிய மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்பது அ.தி.மு.க.தான்.

ஆட்சி தொடர வேண்டும்

தமிழகம் வளர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல் எளிய மக்களும் வளர்ச்சி பெறும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்கள் 418 பேர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவிய ஆட்சிஅ.தி.மு.க. ஆட்சி. நம்மிடம் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது. அந்த சதிக்குள் விழாமல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைய பணியாற்ற வேண்டும். பூத் அளவில் இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகிகள், மகளிர் அணி, பூத் கமிட்டிகளையும் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் அவைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர் ஜான், ராதாகிருஷ்ணன் பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், கருணாகரன், கணேஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சடையப்பன், வார்டு செயலாளர்கள் வேலுமணி, மாணிக்கம், நிர்வாகிகள் பூலுவபட்டி பாலு, தண்ணீர்பந்தல் தனபால், கேபிள் விஜய், அரிஹரசுதன், நீதிராஜன், லோகநாதன், சதீஷ் குமார், பிரிண்ட் பீல்டு மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story