கள்ளக்குறிச்சியில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: துணை நடிகை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலம்


கள்ளக்குறிச்சியில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: துணை நடிகை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலம்
x
தினத்தந்தி 6 Dec 2020 5:04 AM GMT (Updated: 6 Dec 2020 5:04 AM GMT)

கள்ளக்குறிச்சியில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: துணை நடிகை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலம் அக்கா-தங்கை கைது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த செரீப்அகமது மகன் ரியாஸ்அகமது (வயது 29). புதுமாப்பிள்ளையான இவர் கடந்த 30-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் ஏமப்பேர் புறவழிச்சாலையில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபம் எதிரே வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கும்பல் ரியாஸ்அகமதுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரியாஸ்அகமது சிகிச்சைபெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகையான ஜஹாங்கீர் மனைவி நஸ்ரினை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ.3 லட்சம் கடனை ரியாஸ்அகமது திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் அவரை நஸ்ரின் கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்த நஸ்ரினின் தோழிகளான சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அயாத்பாஷா மனைவி அயாத்பீ, இவரது தங்கை பஷீரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படையை சேர்ந்த பஷீராவின் கணவர் அரிகிருஷ்ணன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். நஸ்ரீனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Next Story