8 மாதங்களுக்கு பிறகு வைகை அணை பூங்கா திறப்பு


8 மாதங்களுக்கு பிறகு வைகை அணை பூங்கா திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2020 5:35 AM GMT (Updated: 8 Dec 2020 5:35 AM GMT)

வைகை அணை பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்டதால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

ஆண்டிப்பட்டி,

கொரோனா பாதிப்பு காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வைகை அணை பூங்கா திறக்கப்படவில்லை. இதன்காரணமாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வைகை அணைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமான வைகை அணை பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு வைகை அணை பூங்கா நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பூங்கா திடீரென திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வந்தனர். இதனால் வைகை அணை பூங்கா பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கைகளில் கிருமிநாசினி தெளித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வைகை அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Next Story