விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு


விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
x

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கரூர்,

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று கரூர் நகரில் வழக்கம் போல் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் வழக்கம்போல் இயங்கின. பொது மக்கள் வந்து மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

கரூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் இருந்தன. அனைத்து வழித்தடத்திலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. கரூர் ஜவகர்பஜாரில் உள்ள தலைமை தபால்நிலையத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அதேபோல் நகராட்சி மற்றும் கரூர், தாந்தோணி வட்டரா வளர்ச்சி அலுவலகத்தில் எப்போதும் போல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதேபோன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகள் உள்ளிட்டவை செயல்பட்டதுடன் வாடிக்கையாளர்களும் வந்திருந்தனர்.

குளித்தலை

குளித்தலை பகுதியில் நேற்று ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைக்காரர்கள் கடைகளைத் திறந்து வைத்திருந்தனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி மற்றும் வேன்கள் போன்றவை வழக்கம் போல் ஓடின. அதேபோல ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்களில் பணிகள் வழக்கம்போலவே நடைபெற்றது. இந்த கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாமாக முன்வந்து தங்களது கடைகளை அடைக்க வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் ஒவ்வொரு கடைக்கும் சென்று கடைக்காரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து ஒரு சிலர் கடைகளை அடைக்க முன்வந்தனர். இருப்பினும் பலர் கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

வேலாயுதம்பாளையம்-கிருஷ்ணராயபுரம்

வேலாயுதம்பாளையம் பகுதியில் வழக்கம்போல் மளிகை கடைகள், டீ கடைகள், பேக்கரிகள், அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள், பேரூராட்சி அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் செயல்பட்டன. ஆட்டோக்கள், டெம்போ வேன்கள் ஓடவில்லை. சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கின. அதிலும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

கிருஷ்ணராயபுரம், மாயனூர், செங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். கடையடைப்பு போராட்டத்தால் எந்த பாதிப்பு இல்லை.

தோகைமலை-வெள்ளியணை

தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் எந்த கடைகளும் அடைக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. பொதுமக்களும் அவரவர் சொந்த வேலைகளுக்காக சென்று விட்டு வீடு திரும்பினர்.

வெள்ளியணையில் நேற்று வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. வெள்ளியணை வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் தடையின்றி இயக்கப்பட்டன. பொதுமக்களிடையே பந்த் குறித்து எவ்வித பேச்சுகளும் இல்லாமல் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர். லாலாபேட்டையிலும் அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறந்து இருந்தன.

நச்சலூர்

நச்சலூர் பகுதியில் உள்ள நெய்தலூர், சேப்ளாப்பட்டி, நெய்தலூர், நெய்தலூர் காலனி, நங்கவரம், இனுங்கூர், பொய்யாமணி ஆகிய பகுதிகளில் முழு கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து மளிகைக்கடைகள், டீக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

அரவக்குறிச்சி-நொய்யல்

அரவக்குறிச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளப்பட்டியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மருந்து வணிகர் சங்கத்தினர் தங்களது மருந்து கடைகளை திறந்திருந்தனர். ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் உள்ள டீ, மளிகை, காய்கறி கடைகள், ஓட்டல்கள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வணிகர்கள் நேற்று காலை அடைத்திருந்தனர். அதேபோல் புன்னம்சத்திரம், குட்டக்கடை, மரவாபாளையம், சேமங்கி, கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள், வாத்து கறி விற்பனை செய்யும் கடைகளும் திறந்திருந்தன. க.பரமத்தியில் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

தரகம்பட்டி

தரகம்பட்டி கடைவீதியில் பெரும்பாலான டீ, மளிகை, ஓட்டல்கள், ஜவுளி, பேன்சி, மருந்து உள்ளிட்ட கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல ஓடின. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கின. இதனால் கடைவீதிகளில் வழக்கம்போல் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

Next Story