பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2020 12:30 AM GMT (Updated: 10 Dec 2020 12:30 AM GMT)

பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறையில் இருந்து தவிட்டுபாளையம் செல்லும் சாலை ஓரத்தில் ஏராளமான உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், முட்டை ஓடுகள், கோழி கழிவுகள், பல்வேறு வகையான அழுகிய பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாத்து கறியுடன் இட்லி, தோசை, புரோட்டா, சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாத்துக்கள் வெட்டப்பட்டு சமைத்து இட்லி, சாப்பாடு, புரோட்டா, போன்ற பல்வேறுவகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால் வாத்து, கோழி கழிவுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பேக்கரிகள், பெட்டி கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.

கோரிக்கை

தொடர் மழை காரணமாக பிளாஸ்டிக் கவர்கள், முட்டை ஓடுகள், கப்புகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் புழுக்கள் உற்பத்தியாகிறது. பின்னர் அதில் இருந்து ஆயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்களை தீண்டிவருகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் கள் வரும் அபாயம் இருக்கிறது.

எனவே உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story