சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 8:18 PM GMT (Updated: 10 Dec 2020 8:18 PM GMT)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர் கடந்த 2018- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

5 ஆண்டு சிறை
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு கூறினார்.

இதில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாரதிக்கு 2 பிரிவின்கீழ் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வழக்கில் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனையான 5 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பாரதியை திருச்சி சிறையில் அடைத்தனர்.

Next Story