திருஉத்தரகோசமங்கையில் வருகிற 29-ந்தேதி மரகத நடராஜர் சந்தனகாப்பு களையும் ஆருத்ரா தரிசனம்


ஒரே மரகத கல்லில் செதுக்கப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் சிலை
x
ஒரே மரகத கல்லில் செதுக்கப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் சிலை
தினத்தந்தி 10 Dec 2020 11:47 PM GMT (Updated: 10 Dec 2020 11:47 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் வரும் 29-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.

மரகத நடராஜர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே உள்ள புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை திருக்கோவில். இங்கு மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

இதன்படி வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்குமேல் மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்று இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

ஏற்பாடு
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேசுவரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி உரிய கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story