எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க தேர்தல் பணியாற்ற வேண்டும் - தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க தேர்தல் பணியாற்ற வேண்டும் - தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2020 5:42 PM GMT (Updated: 17 Dec 2020 5:42 PM GMT)

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை,

கோவை மாநகர், புறநகர் தெற்கு, வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் இதயதெய்வம் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எஸ்.ஜே.அசோக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சிங்கைபாலன், தெற்கு மாவட்ட தலைவர் குருசாமி, போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சி.டி.சி.சின்ராஜ் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். ஆட்டோ அன்சர், ஏ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலகண்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசியதாவது:-

தொழிற்சங்கத்தினருக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. தொழிற்சங்கத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்து வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளர்களை பாதுகாக்கிற அரசு தமிழக அரசாகும். அவர்களை வாழ வைக்கிற அரசு இது. உங்கள் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். இன்னும் பல கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கு காரணம் அவரது ஆட்சியை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ் மற்றும் வர்த்தக அணி மாநகர் மாவட்ட செயலாளர் அர.தமிழ் முருகன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என்.பால்ராஜ், எம்.நெடுமாறன், கே.தங்கவேல், பி.முத்தையா, டி.சுரேஷ்பாபு, வி.சி.மனோகரன், சிங்கை ராமச்சந்திரன், கே.என்.ஜெயகோபால், மருதாசலம், தமிழ்வாணன், முனிராஜ், பஷீர், பழனிசாமி, பி.என்.அண்ணாதுரை, ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை பாரதி நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழகத்திலேயே மிக நீளமான பாலம், மற்றும் கோவையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story