வேலாயுதம்பாளையம் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் அரிவாளால் வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு


வேலாயுதம்பாளையம் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் அரிவாளால் வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2020 1:12 AM GMT (Updated: 18 Dec 2020 1:12 AM GMT)

வேலாயுதம்பாளையம் அருகே எலக்ட்ரீசியனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம், 

திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரமே‌‌ஷ். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 27). எலக்ட்ரீசியன். இவரது மனைவி புனிதவள்ளி (24). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ரஞ்சித்குமார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2 மாதங்களாக அறை எடுத்து தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்து விட்டு, அறைக்கு மீண்டும் புறப்பட தயாரானார்.அப்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரஞ்சித்குமார் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

6 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து, ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் எலக்ட்ரீசியனை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story