விழுப்புரம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி அடித்துக் கொலை நண்பர்கள் வெறிச்செயல்


விழுப்புரம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி அடித்துக் கொலை நண்பர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 21 Dec 2020 6:11 AM GMT (Updated: 21 Dec 2020 6:11 AM GMT)

விழுப்புரம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதியை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மகன் தனசீலன்(வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு எழிலரசி(25) என்ற மனைவியும், 1½ வயதில் முகேஷ் என்ற குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக எழிலரசி தனது கணவரை பிரிந்து, சாணிமேடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தனசீலன் அவரது தாய் மங்கலட்சுமியுடன் வசித்து வந்தார்.

ரத்தக்காயங்களுடன் பிணம்

மதுகுடிக்கும் பழக்கம் உடைய தனசீலன், தினமும் மதுகுடித்து விட்டு நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடுவதாக தெரிகிறது. அதுபோல் நேற்று முன்தினம் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிலருடன், மதுகுடித்து விட்டு சூதாட்டம் விளையாடி உள்ளார்.

இந்த நிலையில் தனசீலன் நேற்று அவரது வீட்டில் தலை மற்றும் உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தனசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடியால் தாக்கி...

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், மனைவியை பிரிந்து வாழும் தனசீலன், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு சூதாட்டம் விளையாடுவார். அந்த வகையில் நேற்று முன்தினமும் தனது நண்பர்களுடன் அவர் சூதாட்டம் விளையாடி உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் அருகில் இருந்த தடியால் தனசீலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை எதுவும் தெரியாதது போல் வீட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றதால் அவர் இறந்துள்ளார். இருப்பினும் தனசீலனின் நண்பர்களிடம் விசாரித்த பிறகும், பிரேத பரிசோதனை அறிக்கையின் படியும் தான் உண்மை முடிவு தெரியும் என்றனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசீலனுடன் மது அருந்த சென்றவர்கள் யார்? என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story