கர்நாடகத்தில் இதுவரை புதிய வகை கொரோனா வைரஸ் பரவவில்லை - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் இதுவரை புதிய வகை கொரோனா வைரஸ் பரவவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கின்போது, எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி அளிப்பது என்பது குறித்து சுகாதாரத்துறை வெளியிடும் வழிகாட்டுதலில் தெளிவாக குறிப்பிடப்படும். இங்கிலாந்தில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் பரவவில்லை.
இங்கிலாந்தில் இருந்து கர்நாடகத்திற்கு வந்த 138 பேரின் விவரங்களை கண்டுபிடித்து உள்ளோம். இதில் யாருக்கும் புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்னும் 2,500 பேரின் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இவர்கள் கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதிக்கு பிறகு இங்கிலாந்தில் இருந்து கர்நாடகத்திற்கு வந்தவர்கள்.
வெளிநாடுகளில் இருந்து சுமார் 16 ஆயிரம் பேர் வந்துள்ளதாக வெளியாகும் தகவல் தவறானது. கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதிக்கு பிறகு இதுவரை இங்கிலாந்தில் இருந்து 2 விமானங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் வந்த அனைவரையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story