புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைக்கும் பணி தொடக்கம்


புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2020 12:25 AM GMT (Updated: 24 Dec 2020 12:25 AM GMT)

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான பணி தொடங்கி உள்ளது.

புதுக்கோட்டை,

விமானநிலையங்களில் பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் தேசிய கொடி கம்பீரமாக பறந்து வருகிறது. இதேபோல ரெயில் நிலையங்களிலும் பிரமாண்ட தேசிய கொடி அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் பெரிய கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கரூரில் ரெயில் நிலையம் முன்பு திறந்து வைக்கப்பட்டதில் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. ரெயில் நிலைய வளாகத்தில் மண் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ராட்சத இரும்பு குழாயில் கம்பம் பொருத்தப்பட்டு அதில் தேசிய கொடி பறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திப்பு ரெயில்நிலையமாக...

இதற்கிடையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை சந்திப்பு ரெயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வேண்டுகோள்வைத்துள்ளனர். தற்போது சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிற நிலையில் ரெயில்களில் பார்சல் முன்பதிவுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் முன்பதிவு செய்து பார்சலில் அனுப்பலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story