திசையன்விளையில் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
திசையன்விளையில் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கார் டிரைவர்
திசையன்விளை-உடன்குடி ரோடு கலிலேயாபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 62). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தன்னுடைய மனைவியுடன் நெல்லையில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார்.
ஜீவானந்தத்தின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு திருட திட்டமிட்டனர். அதன்படி நள்ளிரவில் அங்கு சென்ற மர்மநபர்கள், ஜீவானந்தத்தின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நேற்று காலையில் ஜீவானந்தம் மனைவியுடன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகை, பணம் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story